விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலங்கை மெய்வல்லுநனர் சங்கத்தின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெரேராவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இரண்டு முறைகளுக்கு மேல் விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் நீடிக்க வேண்டுமாயின், விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும். இதற்கமைய இரண்டு முறை தலைவர் பதவி வகித்த பாலித்த பெரேரே அந்தப் பதவியில் நீடிக்க விளையாட்டுத்துறை அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தார். எனினும், விளையாட்டுத்துறை அமைச்சர் இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய பாலித்த பெரேரா வழக்கொன்றைத் தாக்கல் செய்ய தயாராகி வருகிறார்.
ஊடகவியலாளர்கள் அண்மையில் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் மீது இளைஞர்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு, நாமல் ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்த போதிலும் அதனை மகிந்தானந்த அளுத்கமகே நிராகரித்திருந்தார். இதற்குப் பழிவாங்குவதற்காகவே நாமல் ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சருக்கெதிராக சூழ்ச்சி செய்துவருவதாக விளையாட்டுத்துறை அமைச்சின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.





