ஜுலை படுகொலைகளின் இருபத்தொன்பதாவது ஆணடு நினைவாக தமிழ் மக்கள் கலந்து கொண்ட பேரணி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் பகுதியில் இன்று (22 ஜுலை) நடைபெற்றது.
மாலை 4மணியிலிருந்து கிழக்கு லண்டன் வெஸ்ராம் பார்க் (Westham Park) இல் உள்ள திடலில் கூடிய மக்கள் மாலை 6.05 க்கு ஊர்வலமாக றொம்பேர்ட் (Romford) வீதி வழியாக ஸ்ரார்ட்பேர்ட் பிராதன வீதியிலுள்ள (Stratford High Street DLR) தொடருந்து நிலையத்துக்கு அருகாமையிலுள்ள இடத்துக்கு மாலை 6.55 மணியவில் வந்தடைந்தனர். அவ்விடத்தில் கொடியேற்றலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தமீழீழ தேசியக் கொடியினை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சே. ஜெயானந்தமூர்த்தி அவர்களும், பிரித்தானிய தேசியக் கொடியினை மருத்துவர் செல்வி மாதவி உதயணன் அவர்களும் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய திரு. கந்தையா இராஜமனோகரன் அவர்கள், உண்ணாநிலைப் போராட்டத்தை நடாத்தவிருக்கிற திரு. சிவந்தன் கோபி முன்வைத்துள்ள ஐந்து கோரிக்கைகள் பற்றி விளக்கினார். அக்கோரிக்கைகளாவன:
1. தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவின் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை தடைசெய்ய வேண்டும்
2. ஐநா ஆனைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அனைத்துலக சட்ட மீறலை விசாரிக்க அனைத்துலக சுயாதீன விசாரனை ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும்.
3. தமிழீழத்தில் அதிவேகமாக நடைபெற்று வரும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த வேண்டும்.
4.தமிழினத்தின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி சிங்களச் சிறையில் விசாரணைகள் ஏதுமற்று தடுத்து வைக்கப்பட்டுள்ள போர்க் கைதிகளை விடுதலைசெய்ய வேண்டும்.
5. தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சிறிலங்காவிற்கு வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் தமிழர்களை திருப்பி அனுப்புவதை உடன் நிறுத்த வேண்டும்.
குர்திஸ்தான் விடுதலை இயக்கச் செயற்பாட்டானளர் திரு.அக்கய்ஃப் வான் (Akaif Wan) அவர்கள் அங்கு திரண்டிருந்த மக்கள் முன் உரையாற்றுகையில். குர்திஸ்தான் மக்களது போராட்டத்திற்கும் ஈழமக்களின் போராட்டத்திற்குமுள்ள ஒற்றுமைகள் பற்றி விபரித்துதடன் பிரித்தானியாவில் தமிழ் மக்கள் நடாத்து எல்லாப் போராட்டங்களிலும் தான் பங்கேற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
கிஙஸ்ரன் பல்கலைக்கழக விரிவுரையாளர் முனைவர் அன்டி கிகின்பொற்றம் (Dr. Andy Higgenbootom) தனதுரையில் ஈழத்தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் இனபடுகொலை நடவடிக்கைகளை கண்டித்ததுடன், சிறைச்சாலைகளின் போர்க்கைதிகள் தாக்கப்படுவது, கொலைசெய்யப்படுவது, இராணுவ ஒடுக்குமறைக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்படுவது ஆகியவை இனப்படுகொலையின் வடிவங்களே எனக் குறிப்பிட்டார்.
திரு. சிவந்தன் கோபி உரையாற்றுகையில், ஈழத்தமிழர்கள் விடுதலை பெறும் வரை தான் தொடர்ந்து இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடவிருப்பதாகவும், மாவீரர் கனவுகளை நிறைவேற்றுவதன் மூலமே தமது பிள்ளைகளை போராட்டத்தில் பறிகொடுத்த பெற்றோரை ஆறுதல் படுத்த முடியும் எனத் தெரிவித்ததுடன், இரவு 8.21க்கு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்தார். வரும் ஒகஸ்ட் 12ம் திகதிவரை அவரது உண்ணாநிலைப் போராட்டம் தொடரவிருக்கிறது.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் விளையாட்டரங்குகளுக்கு சமீபமாகவுள்ள இடத்தில் திரு. சிவந்தன் அவர்களது போராட்டம் தொடரவிருப்பதால், அங்கு திரளவிருக்கும் வெளிநாட்டவர்கள், அரச தலைவர்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





