Lanka News Web

வடக்கில் 5 பேருக்கு ஒரு இராணுவச் சிப்பாய்!

  • PDF

வடக்கில் 5 பேருக்கு ஒரு இராணுவ சிப்பாய் என்ற அடிப்படையில் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய சஞ்சிகை ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

வட மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்ட பொருளாதாரம், அரசியல் வார இதழுக்கு (Economic and Political Weekly) விசேட ஆக்கம் ஒன்றை எழுதியுள்ள செய்தியாளர், இலங்கை பாதுகாப்புச் செயலாளர், அரசாங்கம், இராணுவ இணைத்தளங்களில் வெளியான செய்திகளை ஆராய்ந்துள்ளதுடன், வடக்கில் குறைந்தது ஒரு லட்சத்து 80 ஆயிரம் இராணுவத்தினர் நிலைக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையுடன் விமானப்படையினர், கடற்படையினர் ஆகியோரையும் சேர்த்தால், சுமார் ஒரு லட்சத்து 98 ஆயிரம் படையினர் வடக்கில் நிலைக்கொண்டிருக்கலாம் என அந்தச் செய்தியாளர் மதிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில், இலங்கை மொத்த நிலப்பரப்பில் 14 வீதமான வட மாகாணத்தில், 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத் தொகை கணக்கெடுப்பின்படி, அந்த மாகாணத்தின் மொத்த சனத் தொகை 9 லட்சத்து 97 ஆயிரத்து 754 பேர் ஆகும்.

இதனடிப்படையில் பார்க்கும் போது, வடக்கிலுள்ள 5.04 வீத நபர்களுக்கு ஒரு இராணுவ சிப்பாய் இருக்கின்றார். ஆயிரம் மக்களுக்கு 198.4 வீதமான இராணுவத்தினர் உள்ளனர் என இந்திய சஞ்சிகையின் செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரதூரமான மோதல்களை எதிர்நோக்கிய உலகில் ஏனைய நாடுகளுடன் இலங்கையை ஒப்பிடும் அந்த சஞ்சிகை, 2007 ஆம் ஆண்டில்கூட ஈராக்கில், ஆயிரம் பேருக்கு 20 இராணுவத்தினரே நிலை நிறுத்தப்பட்டிருந்ததாக அமெரிக்க இராணுவத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளது.

உலகில் பயங்கரமான மோதல்கள் நடைபெற்ற 41 சந்தர்ப்பங்களில், ஆயிரம் பொதுமக்களுக்கு 40இற்கும், 50இற்கும் இடைப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கையே தேவைப்பட்டதாக (20 அல்லது 25 பொதுமக்களுக்கு ஒரு சிப்பாய் என்ற வீதம்) பாதுகாப்பு ஆய்வுகளுக்கான நிறுவனம் (Institute of Defence A+nalyses) சுட்டிக்காட்டியுள்ளது.

2003 ஆம் ஆண்டு ரஷ்யா, செச்னியாவுக்கு எதிராக மேற்கொண்ட கடும் போரின் போது, அங்கு ஆயிரம் பேருக்கு 150 இராணுவத்தினர் என்ற வீதத்திலேயே நிலைநிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்தியா தற்போதும் எதிர்நோக்கியுள்ள காஷ்மீர் பிரச்சினையில், காஷ்மீரில் 5 லட்சம் இராணுவத்தினரே நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில், ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில், அங்கு 26 பேருக்கு ஒரு இராணு சிப்பாய் என்ற அடிப்படையிலேயே இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் போர் முடிவடைந்து, 3 வருடங்கள் கழிந்துள்ள பின்னரும், இலங்கையில் வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை யானது, உலக சனத் தொகையுடன் ஒப்பிடும் போது, அளவுக்கு அதிகமான இராணுவச் சிப்பாய்களில் வீதம் எனவும் இந்தியாவின் பொருளாதார, அரசியல் வார இதழ் தெரிவித்துள்ளது.